33 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை: உ.பி., கொடூர தம்பதிக்கு மரண தண்டனை

சித்ரகூட்: உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உ.பி.,யின் நீர்ப்பாசன துறையில், இளநிலை பொறியாளராக பணிபுரிந்தவர் ராம்பவன். இவரது மனைவி துர்காவதி.

இருவரும் அங்குள்ள சித்ரகூட் பகுதியில் வசித்து வந்தனர். 2010 – 20 வரை சித்ரகூட் மற்றும் பாண்டா பகுதியைச் சேர்ந்த சிறுவர்களை, இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ எடுத்து சட்ட விரோத இணையதளங்களுக்கு விற்றுள்ளனர்.

சிறுவர் ஆபாச வீடியோ தொடர்பாக, உ.பி., சைபர் கிரைம் போலீசார் நடத்திய சோதனையில், ராம்பவன் – துர்காவதி தம்பதியின் கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

உ.பி.,யின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை, இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆன்லைன் கேம் விளையாட வைப்பது, சாக்லேட், இனிப்புகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை தருவது என, பலவிதமாக ஆசைக்காட்டி சிறுவர்களை இருவரும் சீரழித்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் வெளிநாட்டுக்கும் விற்கப்பட்டதும் தெரிய வந்தது.

இவர்களால் பாதிப்படைந்த சிறுவர்கள் அந்தரங்க உறுப்புகளில் காயத்துடனும், கண் கோளாறுகளாலும் இன்றும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து, 2020ல் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., ராம்பவன் – துர்காவதி தம்பதியின் வீட்டில் சோதனை நடத்தியது.

இதில், 8 லட்சம் ரூபாய், 12 மொபைல் போன்கள், இரண்டு லேப் டாப்கள், ஒரு ஹார்ட் டிஸ்க், ஆறு பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. இருவர் மீதும் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாண்டா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

ஆறு ஆண்டுகளாக நடந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உட்பட, 74 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ராம்பவன் – துர்காவதி தம்பதி செய்த குற்றங்கள் அரிதிலும் அரிதானவை. மிகவும் ஒழுக்கக்கேடானதும் கூட. இதுபோன்ற குற்றங்கள், குழந்தைகளின் வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் தார்மீக அடித்தளத்தையும் உலுக்குகின்றன.

இது போன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கருணை மிகவும் ஆபத்தான செய்தியை சமூகத்துக்கு தரும்.

குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதால், போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அவர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

மத்திய – மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Source link