50 ஆண்டுகளாக திமுகவுக்கு பெப்பே

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில், 55 ஆண்டுகளாக தி.மு.க., நேரடியாக வெற்றி பெறாத நிலையில், இம்முறை தி.மு.க.,வை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர்.

பாபநாசம் தொகுதியில், கடந்த 2021 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இந்த தேர்தலிலும் போட்டியிட, அதே தொகுதியை கேட்டு வருகிறார். ஆனால், ‘இம்முறை தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்’ என கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:பாபநாசம் சட்டசபை தொகுதியில், கடந்த 1952 முதல் 1967ம் ஆண்டு வரை, காங்., வெற்றி பெற்றது. பின், 1971 தேர்தலில் மட்டும் தி.மு.க., சார்பில் கணபதி என்பவர் போட்டியிட்டு வென்றார். அதன்பின், 1977 முதல் 1991 வரை காங்கிரஸ் வென்றது; 1989ல் மறைந்த ஜி.கே.மூப்பனார் வெற்றி பெற்றார். பின் 1996 மற்றும் 2001ல், த.மா.கா., வென்றது.

அதைத் தொடர்ந்து, 2006, 2011, 2016 தேர்தல்களில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு பாபநாசம் தொகுதியை ஒதுக்கிய நிலையில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வெற்றி பெற்றது.

கடந்த 1971 தேர்தலுக்கு பின், 55 ஆண்டுகளாக, பாபநாசம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றதில்லை. கடந்த தேர்தலில், உதயசூரியன் சின்னம் வென்றாலும், வேட்பாளர், தி.மு.க.,வை சேர்ந்தவர் இல்லை. எனவே, இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளரே நேரடியாக களமிறங்கும் வகையில், தொகுதியை தி.மு.க.,வுக்கே ஒதுக்க வேண்டும் என, கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link