கொல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ., வெளியிட்டது. ‘ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்; குடும்பத் தலைவியருக்கு மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்’ போன்ற வாக்குறுதிகளை அக்கட்சி வழங்கி உள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
முதற்கட்ட தேர்தல்
வரும் 23ல், 152 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், வரும் 29ல், 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமா ன அமித் ஷா வெளியிட்டார். ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இருண்ட காலம்
உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ”மேற்கு வங்க மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கை உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின், 15 ஆண்டு கால ஆட்சி இருண்ட காலம் போன்றது. மேற்கு வங்கத்தை தங்க மாநிலமாக மாற்றி, இழந்த பெருமையை மீட்போம்,” என்றார்.
