80 அடி ஆழத்தில் 10 லட்சம் பேரை காக்கும் நிலத்தடி நகரம்: ஹெல்சிங்கியின் ரகசிய பாதுகாப்பு திட்டம் – என்னவெல்லாம் இருக்கு தெரியுமா? – 80 feet underground inside helsinkis secret underground city for 1 million people

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தினால் அதிலிருந்து தப்பிக்க பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கி, சுமார் 10 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் நிலத்தடி பதுங்கு நகரத்தை வடிவமைத்துள்ளது. இந்த பதுங்கு நகரம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவசரநிலையில் மக்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில் இந்த பதுங்கு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் போர் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா–உக்ரைன் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இரவு முழுவதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல்களால் உலகளவில் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி தொடர்பான அச்சங்கள் அதிகரித்துள்ள சூழலில், ஐரோப்பிய நாடுகளும் தங்களது குடிமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆயிரக்கணக்கான பதுங்கு அறைகள்

ஹெல்சிங்கி நகரில் மட்டும் 5,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அறைகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு மையங்கள் பல்லாயிரக்கணக்கான கன மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. சில முக்கிய பதுங்கு மையங்கள் சுமார் 71 ஆயிரம் கன மீட்டர் கொள்ளளவு கொண்டதாகவும், ஏழு மாடி அலுவலகக் கட்டடத்தின் கொள்ளளவுக்கு இணையான பரப்பைக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பதுங்கு மையங்களில் சில, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் திறன் கொண்டவை. குறிப்பாக, மிகப்பெரிய மையங்களில் ஒன்றில் மட்டும் சுமார் 6,000 பேர் வரை தங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அணு, வேதியல் தாக்குதலையும் தாங்கும் பாதுகாப்பு

இந்த பாதுகாப்பு மையங்களின் முக்கிய சிறப்பம்சம் அவற்றின் பாதுகாப்பு தொழில்நுட்பமாகும். நுழைவாயில்களில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு வெடிப்பு தடுப்பு கதவுகள், ஏவுகணை வெடிப்பால் உருவாகும் அதிர்வலைகளை தடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், இரண்டாம் கட்ட பாதுகாப்பு கதவுகள் வேதியல், உயிரியல் மற்றும் அணு (CBRN) தாக்குதல்களிலிருந்து உள்ளே இருப்பவர்களை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா–உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், ஹெல்சிங்கியின் இந்த நிலத்தடி நகரம், நவீன கால பாதுகாப்பு திட்டமிடலின் முக்கிய எடுத்துக்காட்டாக சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது.

விளையாட்டு அரங்கம் முதல் உடற்பயிற்சி கூடம் வரை

இந்த நிலத்தடி கட்டமைப்புகள் வெறும் பதுங்கு அறைகளாக மட்டுமல்லாமல், அன்றாட பயன்பாட்டிற்கும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தரையிலிருந்து சுமார் 80 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த வளாகங்களில் விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

பூமிக்கடியில் உருவான இரண்டாவது நகரம்

இந்த சூழலில் உலகின் கவனத்தை ஈர்த்திருப்பது பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கி. சாத்தியமான போர் அல்லது அணு ஆயுதத் தாக்குதல் போன்ற அவசரநிலைகளை எதிர்கொள்ளும் வகையில், நகரத்தின் அடியில் மிகப்பெரிய நிலத்தடி பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நகரின் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு வலையமைப்பு, அவசர காலங்களில் சுமார் 10 லட்சம் மக்களுக்கு தற்காலிக தங்குமிடமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பின்லாந்து பல தசாப்தங்களாக தேசிய பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பதுங்கு அமைப்புகளை உருவாக்கி பராமரித்து வருகிறது. தற்போதும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு அறைகள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளன.

சிறப்பு ஏற்பாடுகள்

பொதுமக்கள் வழக்கமாக இந்த வசதிகளை பயன்படுத்துவதால், அவசரநிலை ஏற்பட்டாலும் அவற்றை எளிதாக செயல்பாட்டிற்கு மாற்ற முடியும். தேவையெனில் 72 மணி நேரத்திற்குள் முழுமையான தங்குமிடங்களாக மாற்றும் வசதியும் இதில் உள்ளது. அடுக்குக்கட்டில்கள், குடிநீர் சேமிப்பு, நகர்த்தக்கூடிய கழிப்பறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Source link