நமது நிருபர்
ஜெனிவாவில் அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த இரண்டாம் சுற்று அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்து உள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் தன் அணுசக்தி திட்டத்தின் கீழ், சர்வதேச விதிகளுக்கு அப்பாற்பட்டு, அதிகளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஈரானால் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்பதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் இதற்கு ஈரான் சம்மதிக்காத நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் இணைந்து கடந்த ஆண்டு அதன் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த பதற்றத்தை தவிர்க்க அரபு நாடுகளின் வேண்டுகோள்படி, அமெரிக்காவும், ஈரானும் பேச்சு நடத்த சம்மதித்தன. மேற்காசிய நாடான ஓமனில் முதல்சுற்று பேச்சில் சமரசம் எட்டாத நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரண்டாம் சுற்று பேச்சு நேற்று தொடங்கியது.
இந்தமுறை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானுக்கு அது மோசமான நாளாக மாறும் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது. இந்த மாதம் ஓமனில் நடந்த முந்தைய சுற்று பேச்சுவார்த்தைகளுடன் ஒப்பிடும்போது, ’மிகவும் ஆக்கபூர்வமானவை. பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார்.
