சென்னை : ‘அண்ணா பல்கலை பதிவாளருக்கு, நிர்வாக தகுதி இல்லை; அரசியல் தொடர்பு மட்டுமே ஒரே தகுதி’ என, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள, கடிதத்தில் கூறியிருப்பதாவது; அண்ணா பல்கலை, சமீப நாட்களாக சந்தித்து வரும் பிரச்னைகளை, மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. தற்போதைய பதிவாளரின் தவறுகள், அலட்சியங்களுமே, இதற்கு காரணம். போதிய அனுபவம் இல்லாததால், அவரால், மாணவர்கள், பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, புரிந்து கொள்ள இயலவில்லை என, தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய பதிவாளரின் நியமனம், சட்டரீதியாக செல்லாது.
ஏனெனில், அண்ணா பல்கலையின், நான்கு வளாக கல்லுாரி முதல்வர்களில் ஒருவர், அல்லது ஐந்து மூத்த பேராசிரியர்களில் ஒருவரே, பதிவாளராக தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. அவர், எந்த துறைகளுக்கும், தலைவராக பதவி வகிக்கவில்லை. இதனால், அவருக்கு, போதிய நிர்வாக அனுபவம் கிடையாது. ஒரு தகுதி, அரசியல் தொடர்பு மட்டுமே. ஏனெனில், அவர் தி.மு.க., முன்னாள் அமைச்சரின் மருமகன் என தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய நிலைமை, கல்வி நிறுவனத்தை சீர்குலைத்துவிடும். இனியும், இது தொடர்ந்தால், பல்கலை, மேலும் சீர்குலைய வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
