– நமது சிறப்பு நிருபர் -: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் திறக்கப்பட்ட பின், அந்நகரத்தின்

– நமது சிறப்பு நிருபர் -:

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் திறக்கப்பட்ட பின், அந்நகரத்தின் பொருளாதார வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தி நகரில், 2024 ஜன., 22ல் பிரமாண்ட ராமர் கோவில் திறக்கப் பட்டது.

இங்கு, பால ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலை போலவே, இந்த கோவிலுக்கும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.ஐ.டி., லக்னோவைச் சேர்ந்த பேராசிரியர் வெங்கடரமணய்யா தலைமையிலான குழுவினர், அயோத்தியில் ஒரு வாரம் தங்கியிருந்து, ‘அயோத்தியின் பொருளாதார மறுமலர்ச்சி: ராமர் கோவில் குறித்த ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தினர். இது தொடர்பாக, பக்தர்கள், வியாபாரிகள், அதிகாரிகளுடன் கலந்துரையாடி தகவல்களை சேகரித்தனர்.

ஆய்வறிக்கை விபரம்:

 ராமர் கோவில் திறப்புக்கு முன், ஆண்டுக்கு சராசரியாக, 1.7 லட்சம் பேர் மட்டுமே அயோத்திக்கு வந்து சென்ற நிலையில், 2024-ன் முதல் ஆறு மாதங்களில் மட்டும், இந்த எண்ணிக்கை 11 கோடியாக உயர்ந்துள்ளது

 உள்ளூர் சிறு வியாபாரிகளின் தினசரி வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ளது. முன்பு, நாள் ஒன்றுக்கு 400 — 500 ரூபாய் ஈட்டியவர்கள், தற்போது 2,500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகின்றனர்

 கோவில் அருகிலுள்ள நிலங்களின் மதிப்பு 5 – 10 மடங்கு வரை அதிகரித்துள்ளது. நகரின் மற்ற பகுதிகளில் சொத்துகளின் விலை, 25 – 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது

 அயோத்தியில் 150-க்கும் மேற்பட்ட புதிய ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்வது, 400 சதவீதம் அதிகரித்துள்ளது

 அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறைகளில், 1.20 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்

 சுற்றுலா தொடர்பான செயல்பாடுகள் மூலம் அரசுக்கு, 20,000 – 24,000 கோடி ரூபாய் வரை வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து அதிக பக்தர்கள்

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்திக்கு வருகை தருகின்றனர். இது, ராமர் கோவில் மீதான தேசிய அளவிலான ஈர்ப்பை பிரதிபலிப்பதோடு, போக்குவரத்து, உணவகத் துறையின் வளர்ச்சிக்கும் பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.

ஆன்மிக பாரம்பரியத்தை முறையான உட்கட்டமைப்பு மற்றும் திட்டமிடலுடன் இணைக்கும்போது, அது ஒரு நகரின் பொருளாதாரத்தை எப்படி மாற்றியமைக்கும் என்பதற்கு அயோத்தி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Source link