'ரோபோ நாய்' சர்ச்சை: பல்கலை அரங்கு அனுமதி ரத்து

– நமது சிறப்பு நிருபர் –

டி ல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் கண்காட்சியில், தனியார் பல்கலைக்கழகம் சொந்தமாக தயாரித்ததை போல் காட்சிப்படுத்திய ரோபோ நாய், சீன தயாரிப்பு எனத் தெரிந்ததும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அந்த பல்கலையின் அரங்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ‘கல்கோடியாஸ்’ என்ற அந்த பல்கலை பிரதிநிதிகள், ரோபோ நாய் ஒன்றை பார்வையாளர்களுக்கு காட்டி, ”இது எங்கள் கேம்பஸில் எப்போதும் சுற்றி வருகிறது. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது,” என்றெல்லாம் கூறினர்.

அதையடுத்து, அந்த ரோபோ பெரும் கூட்டத்தை ஈர்த்தது. அதன் செயல்பாடுகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதும், உண்மை வெளியானது.

சீனா மற்றும் யூரேசிய விவகாரங்களை கவனித்து வரும் பல ஊடகங்கள், அந்த ரோபோவை பல்கலைக்கழகம் சீனாவில் இருந்து வாங்கியுள்ளது. அதை தானே உருவாக்கியதை போல் காட்டியது மிகவும் தவறு என்று குற்றம்சாட்டினர்.

இதற்கு பதிலளித்த பல்கலை, ”யுனிட்ரீ நிறுவனத்தின் ரோபோ டாக் சமீபத்தில் வாங்கப்பட்டது. இது கற்பித்தலுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. எங்கள் மாணவர்கள் இதை சோதனை செய்து, அறிவை விரிவாக்கி வருகின்றனர்,” என்று விளக்கமளித்துள்ளது.

Source link