லிமா: உலகின் இளம் அதிபர் என்று பெயரெடுத்த பெரு நாட்டின் இடைக்கால அதிபர் ஜோஸ் ஜெரி, 39, அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்க நாடான பெரு, பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், ஊழல் மற்றும் அரசியல் குழப்பங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு, கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை ஏழு அதிபர்கள் மாறியுள்ளனர்.
பெரும்பாலானோர் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், தகுதியின்மை போன்ற காரணங்களால் பார்லிமென்ட் உறுப்பினர்களால் நீக்கப்பட்டனர். முதல் பெண் அதிபராக இருந்த டினா பொலுவார்டே, அரசிய ல் போராட்டங்கள், சொத்து குவிப்பு வழக்குகள் காரணமாக கடந்த ஆண்டு நீக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜோஸ் ஜெரி கடந்தாண்டு அக்டோபரில் பதவியேற்றார். ஆட்சிக்கு வந்து வெறும் நான்கு மாதங்களே ஆன நிலையில், அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவின் தொழிலதிபர் ஜிஹுவா யாங்கை ரகசியமாக சந்தித்தது, சீன உணவகத்துக்கு முகத்தை மறைத்து சென்றது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
யாங்கின் நிறுவனத்துக்கு, பெரு அரசின் எரிசக்தி திட்டத்தில் ஒப்பந்தம் இருந்தது தெரியவந்ததால், ஜெரி மீது ஊழல் வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.
இதையடுத்து, பெரு பார்லிமென்டில் நடைபெற்ற ஓட்டெடுப்பில், 75 எம்.பி.,க்கள், ஜோஸ் ஜெரியை நீக்குவதற்கு ஆதரவாகவும், 24 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் ஓட்டளித்தனர்; மூன்று பேர் ஓட்டெடுப்பை தவிர்த்தனர்.
இதனால், ஜெரி உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார். வரும் ஏப்ரல் மாதத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடு மீண்டும் அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
