சென்னை: ”கூட்டணி என்பது அந்தந்த கட்சி தலைவர்களின் விருப்பம்,” என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
நேற்று வரை எந்த கூட்டணிக்கு செல்வது என சொல்லாமல் தேமுதிக இருந்தது. இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா, தேமுதிக – திமுக கூட்டணியை உறுதி செய்தார். இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
அதேநேரத்தில், தமிழக பாஜ வெளியிட்ட அறிக்கையில், ‘ திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது,’ என விமர்சனம் செய்திருந்தது. தமாகா தலைவர் வாசனும் தேமுதிகவின் முடிவை விமர்சனம் செய்திருந்தார்.
இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸிடம், பிரேமலதா குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிறகு பதிலளிப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை சட்டசபை முடிந்து கிளம்பும்போது, தேமுதிக – திமுக கூட்டணி குறித்து இபிஎஸ் கூறுகையில், கூட்டணி என்பது அந்தந்த கட்சிகளின், தலைவர்களின் விருப்பம்’ என ஒரே வரியில் பதிலளித்து விட்டு சென்றார்.
