விருதுநகர்: எனக்கு அரசியலே பிடிக்காது. காலச் சூழ்நிலை என்னை பிடிக்காத அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது என வைகோ மகனும், மதிமுக எம்பியுமான துரை தனது குமுறலை வெளிப்படையாக பேசியுள்ளார்.
விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் மதிமுக எம்பி துரை வைகோ பேசியதாவது: எனக்கு அரசியலே பிடிக்காது. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அரசியல் பிடிக்காது. அரசியல்வாதிகளை பிடிக்காது. நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை. ஆனால், கால சூழ்நிலை என்னை பிடிக்காத அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது.
எம்.பி., பதவியை நான் தேடிச் செல்லவில்லை. தானாக வந்தது. அரசியல் களத்தில் நான் சந்தோசமாக இல்லை. நாள் தோறும் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வருகிறேன். கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் ஆதாயம் இல்லாத சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். இவ்வாறு துரை வைகோ பேசினார்.
