தாவணகெரே: “அரசு பாக்கி வைத்துள்ள 37,000 கோடி ரூபாயை ஒரே தவணையில் விடுவிக்காவிட்டால், மார்ச் 5ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்,” என, கர்நாடக கான்ட்ராக்டர்கள் சங்கத்தின் தலைவர் மஞ்சுநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவின் தாவணகெரேயில் அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, கான்ட்ராக்டர்கள் செய்த பணிக்கே இன்னும் பணம் வழங்கப்படவில்லை. பா.ஜ., ஆட்சியில் கேட்கப்பட்டதை விட, காங்கிரஸ் ஆட்சியில் அதிக கமிஷன் கேட்கப்படுகிறது.
பொதுப்பணித்துறை 8,370 கோடி ரூபாய்; நீர்ப்பாசன துறை 13,000 கோடி; ஊரக வளர்ச்சி மற்றும் கிராம பஞ்சாயத்து ராஜ் துறை 3,800 கோடி; நகர்ப்புற மேம்பாட்டு துறை 2,000 கோடி ரூபாய் உட்பட பல துறைகள், கான்ட்ராக்டர்களுக்கு 37,000 கோடி ரூபாய் பில் தொகையை பாக்கி வைத்துள்ளன.
இது தொடர்பாக மாநில அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும், எந்த பயனும் இல்லை.
துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் மட்டுமே எங்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கின்றனர். மற்றவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
முதல்வர் சித்தராமையா அனைத்து துறைகளின் அமைச்சர்களுடனும் ஆலோசித்து இருந்தால், எங்களுக்கு பணம் கிடைத்திருக்கும்.
அரசு பாக்கி வைத்துள்ள 37,000 கோடி ரூபாயை ஒரே தவணையில் விடுவிக்கக்கோரி, மார்ச் 5ம் தேதி முதல் பெங்களூரில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
பா.ஜ., ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுப்பு டெண்டர் முறைக்கு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், தற்போது தொகுப்பு டெண்டர் முறையே நடைமுறையில் உள்ளது.
இந்த நடைமுறை சிறு, குறு, நடுத்தர கான்ட்ராக்டர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. தொகுப்பு டெண்டர் மூலம் வெளிமாநில கான்ட்ராக்டர்கள் பயன்பெறுகின்றனர்.
நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி துறையில் இடைத்தரகர்கள் தொல்லை அதிகரித்து விட்டது. வீட்டுவசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், ஒரு சில கான்ட்ராக்டர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்குகிறார்.
இதுபோன்ற அமைச்சர்கள் மீது, முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றே தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
