காங்கிரசில் ஒரே நேரத்தில் ஒன்பது குரல்: வைகோ கிண்டல்

மதுரை: ”காங்கிரசார் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் எழுப்புவர்; அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல,” என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: திராவிட இயக்கத்தை பாதுகாக்கவே தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தோம். நெருடல் ஏற்பட்டு விடாமல் கருத்து தெரிவிக்கிறேன். பிரதமர் மோடிக்கு மக்களை ஏமாற்றும் வித்தை தெரியும்.

பாரதியார் பாடல், திருக்குறளை இரண்டு வரிகள் ஹிந்தியில் எழுதி வைத்து பெருமை பேசிக்கொண்டு, ஹிந்தியை திணிக்க நினைக்கிறார். தமிழகத்திற்கு ஒரே மாதத்தில் மூன்று முறையல்ல; 33 முறை வந்தாலும் பா.ஜ., இங்கே தேறாது.

த.வெ.க.,வுக்கு 15 சதவீத ஓட்டுகள் உள்ளது என துரை வைகோ கூறியிருப்பது அவரது கருத்து. தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வந்துள்ளதால், அ.தி.மு.க., முகாம் கலகலத்துள்ளது.

மாணிக்கம் தாகூர் எம்.பி., ‘நாங்களும் திருப்பி அடிப்போம்’ என பேசுகிறார். அது, தெருவில் இருவர் சண்டை போட்டுக்கொள்வது போல் உள்ளது. காங்., துவங்கியது முதலே, சிலர் அக்கட்சிக்குள் இருந்து கொண்டே கலகக் குரல் எழுப்புவது வாடிக்கை தான்.

பல இடங்களில் உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் கிழிபட்டிருக்கின்றன. அவர்கள் என்ன சொன்னாலும், அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஆட்சியில் பங்கு என்பது போன்று, காங்கிரசார் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் எழுப்புவர். அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Source link