கிரக பலன்கள் யாருக்கு சாதகம்: சட்டசபையில் ஜோதிட ஆராய்ச்சி

சென்னை: ‘கிரகப் பலன்கள், யாருக்கு சாதமாக இருக்கப் போகிறது’ என, சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தது.

சட்டசபையில் நடந்த விவாதம்:

பா.ஜ., நயினார் நாகேந்திரன்: ‘நீட்’ தேர்வுக்கு முன்பு மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்த, அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 43 மட்டுமே. ஆனால், நீட் தேர்வுக்கு பின், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வந்த பின், ஆண்டுக்கு 543 மாணவர்கள், மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த நட்டா, அன்றைய முதல்வர் பழனிசாமி ஆகியோர் பேசிதான், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது பா.ஜ., தலைவர் நட்டா என, நயினார் நாகேந்திரன் கூறுகிறார். இதை அ.தி.மு.க., ஏற்றுக் கொள்கிறதா.

நயினார் நாகேந்திரன்: மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு, 5,000 ரூபாய் வழங்கியதை வரவேற்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்: 5,000 ரூபாய் வழங்கியது குறித்து, நீங்கள் அளித்த பேட்டியை பார்த்தேன். ‘மோடி மஸ்தான்’ போல் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறீர்கள் என தெரிவித்தீர்கள். தவறி சொல்லி இருக்கலாம்.

நயினார் நாகேந்திரன்: நல்ல எண்ணத்துடன்தான் அதை சொன்னேன். ‘மேஜிக் மேன்’ போல் 5,000 ரூபாய் கொடுத்தனர் என்று கூறினேன். மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதை தடுக்க சதி செய்ததாக தெரிவித்துள்ளீர்கள். மக்களுக்கு பணம் கொடுப்பதை, பா.ஜ., ஆதரிக்கும். ஆனால், தேர்தலை மனதில் வைத்தே, தி.மு.க., அரசு பணம் கொடுத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவருக்கும், 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக பா.ஜ., சொன்னது என்னவாயிற்று.

நயினார் நாகேந்திரன்: கோடைக்கால நிதியாக 2,000 ரூபாய் கொடுத்துள்ளீர்கள். ஐந்து கோடை காலத்திற்கும், விடுபட்ட 28 மாதங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகையை கொடுத்தால் நன்றாக இருக்கும். நேற்று முன்தினம் அ.தி.மு.க., உறுப்பினர் முனுசாமி பேசும்போது, தி.மு.க., ஆட்சியின் இறுதி என்றார்.

அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க., அரசுக்கு இறுதி அல்ல; உறுதி என்றார். ஆனால், என்னைப் பொறுத்தவரை, காலங்கள் செய்யாததை கிரகங்கள் செய்யும். எல்லாம் இறைவன் தீர்ப்பு.

அமைச்சர் சேகர்பாபு: கிரகப் பலன்கள் அனைத்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு சாதகமாக உள்ளது. தமிழ்க் கடவுள் முருகன், முதல்வருடன் கை கோர்த்துக் கொண்டுள்ளார். எனவே, கிரகங்கள் அவருக்கு சாதகமாக உள்ளன. மீண்டும் சட்டசபைக்கு வருவதற்கான முயற்சிகளை, நயினார் நாகேந்திரன் மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: கிரக நிலையைப் பொறுத்தவரை, நயினார் நாகேந்திரனுக்கு அஷ்டமத்தில் சனி இருக்கிறது. எங்களுக்கு ஒன்பதில் குரு இருக்கிறது.

நயினார் நாகேந்திரன்: தங்கம் தென்னரசு சரியாகவே சொல்கிறார். ஆனால், அஷ்டமத்தில் சனி இருந்தாலும், என்னை குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். குரு பார்க்க கோடி நன்மை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

யார் முதல்வர்?

”தேர்தல் அறிக்கையில் கூறியதை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கையை, வரும் ஜூனில் நிறைவேற்றுவோம் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ”வரும் ஜூனில் யார் முதல்வர் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்,” என, சட்டசபையில் நயினார் நாகேந்திரன் பேசினார்.

Source link