மதுரை: அதிமுக-வில் இணையும் அழகிரி ஆதரவாளர்கள்; அமைச்சர் தொகுதி டார்கெட்டா? – தடதடக்கும் களம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலது கரம், தீவிர ஆதரவாளர் என்றெல்லாம் பேசப்பட்ட பி.எம். மன்னன் அதிமுக-வில் சேர்ந்திருப்பது மதுரை அரசியலில் வட்டாரங்களில் அனலைக் கிளப்பியுள்ளது.

மு.க.அழகிரியுடன் பி.எம்.மன்னன்

திமுக-வின் மதுரை முகமாக இருந்தவர்தான் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரி. 2014 ஆம் ஆண்டு கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் மு.க.அழகிரியையும் அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

அதன் பிறகு அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார் மு.க.அழகிரி. இவரின் வலது கரமாக இருந்தவரும், முன்னாள் துணை மேயராக இருந்தவருமான பி.எம் மன்னன் மீண்டும் திமுக-வில் இணைவதற்கான வேலைகளை செய்து வந்த நிலையில், திடீரென அதிமுக-வில் இணைந்தார்.

மேலும் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேலைகளையும் மன்னன் செய்து வருகிறார் என்ற தகவல், உடன்பிறப்புகளிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இது குறித்து சீனியர் திமுக நிர்வாகிகள் நம்மிடையே பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குப் பிறகு அவருடைய அரசியல் வாரிசு யார் என்கிற போட்டி மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே இருந்தது. இதற்கிடையேதான் மு.க.அழகிரியையும் அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார் கருணாநிதி. அதன் பின் அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். அவருடைய ஆதரவாளர்களோ திரும்பவும் திமுக-வில் சேர்க்கச் சொல்லி தூது அனுப்பிக் கொண்டே இருந்தனர்.

பி.எம்.மன்னன்
பி.எம்.மன்னன்

திமுக தலைமையே அவர்களை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டால், மு.க. அழகிரியின் போட்டோவுடன் போஸ்டர்கள் அடிப்பார்கள், அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள், மறைமுகமாக கட்சிக்குள் அழகிரியின் குரல் உயர வாய்ப்புள்ளது என்பதால், இது குறித்து முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும் அதிமுக-வில் சேர்வதற்காகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன.

முதலமைச்சரை நேரில் பார்த்த மன்னன், கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்ததோடு மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் கொடுத்தார். கடந்த வாரம் சபரீசன் மதுரைக்கு வந்திருந்தார். 10 தொகுதிகளின் நிர்வாகிகளையும் மூன்று வெவ்வேறு இடங்களில் சந்தித்த சபரீசன், எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்கான விவரங்களை வாங்கியதோடு திருமங்கலம், மதுரை தெற்கு தொகுதிகளை டார்க்கெட் செய்யுங்கள் எனச் சொன்னார்.

அழகிரியுடன் மன்னன்
அழகிரியுடன் மன்னன்

இதற்கிடையே அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனியாக சபரீசனைச் சந்தித்து தனக்கு கீழே உள்ள நிர்வாகிகளில் யார் யார் வேலை செய்யவில்லை? அதற்கான காரணம் என்ன? என்பதையெல்லாம் எழுதி கொடுத்ததோடு, மன்னன் அதிமுக-விடம் மத்திய தொகுதியை கேட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளது குறித்தும் சொல்லி, அரை மணிநேரம் இது குறித்தும் விவாதித்தார்கள்.

இதற்கு பின் வெளிய வந்த சபரீசன், பி.எம் மன்னன் கட்சியில் இணைவது குறித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு சென்று விட்டார். அதற்கு பிறகும் இன்னும் முடிவு சொல்லவில்லை என்கிற விரக்தியிலேயே அதிமுக-வில் சேர்ந்திருக்கிறார் பி.எம்.மன்னன்” என்றனர் விரிவாக.

சபரீசன் மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
சபரீசன் மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

இது குறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “மதுரை திமுக-வில் நடக்கும் கோஷ்டி மோதல்களை சரி செய்யமால் அதை கொழுந்துவிட்டெரிய செய்திருக்கிறார் சபரீசன். பி.எம்.மன்னன் செல்வாக்கோடு இருந்த காலகட்டத்தில் கட்சிக்குள் நிர்வாகியாக இருந்தவர்களிடம் போய் தன்னை கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள் என நிற்பதா? என்கிற ஈகோ ஏற்பட்டிருக்கிறது. மேலும் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாநகர மாவட்ட செயலாளர் கோ. தளபதி ஆகியோர் மன்னனை கட்சிக்குள் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சபரீசன் வந்து சென்ற இரண்டு நாள்கள் கழித்து மதுரைக்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும் இது குறித்து விவாதித்து, அவரும் பதில் சொல்லவில்லை என்பதாலேயே அதிமுக-விற்கு செல்லும் முடிவை எடுத்திருக்கிறார் மன்னன். அதிமுக-வில் சேர்ந்தால் தனக்கு மத்திய தொகுதியை ஒதுக்க வேண்டும் என்கிற டீலிங் பேசி அதற்கு அதிமுக கீரின் சிக்னல் காட்டிய பிறகே கட்சியில் இணைந்திருக்கிறார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

மேலும் திமுக அமைச்சர்கள் மீது தனக்குள்ள கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, `மதுரையிலே சிலர் அதிகாரத் திமிரில் திமுக-வின் கீழ்மட்டத் தொண்டர்களை அடிமை போல் நடத்தக்கூடிய அடிமைத்தனத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என காட்டமாகப் பேசியுள்ளார்.

மதுரை மத்திய தொகுதியில் ஏற்கெனவே ஆரப்பாளையம் பகுதியில் மன்னனுக்கு செல்வாக்கு இருக்கிறது. இதனுடன் இரட்டை இலை வாக்குகள் சேர்ந்தால் திமுக-விற்கு கடுமையான போட்டி ஏற்படும். இதையெல்லாம் சபரீசனும் கணக்கு போட்டு பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை வெற்றி பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகளை கண்டிப்புடன் பேசி விட்டு சென்றுள்ளார்.

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி

ஆனால் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனோ தனக்கு கீழ் உள்ள கட்சி நிர்வாகிகள் மீது விரக்தியில் இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினரும் தங்களுக்கு மதுரை தெற்கு அல்லது மதுரை மத்தியை ஒதுக்குங்கள் என திமுக-விடம் கேட்பதற்கு தயாராக உள்ளனர்” என்றனர்.

Source link