புதுடில்லி: டில்லி ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டம் தேசத்திற்கு அவமானம் என்று பாஜ விமர்சித்துள்ளது.
டில்லியில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்று உள்ளனர்.
இந் நிலையில், பாரத் மண்டபத்தில் இன்று இளைஞர் காங்கிரசார் நுழைந்து திடீரென போராட்டம் நடத்தி உள்ளனர். தாங்கள் அணிந்திருந்த மேல்சட்டையை கழற்றிவிட்ட அவர்கள், இந்தியா, அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் மோடி, டிரம்ப் ஆகியார் படங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை டி சர்ட்டுகளை அணிந்த படியே நடந்து சென்றனர்.
எதிர்பாராத இந்த போராட்டத்தால் மாநாடு நடைபெறும் அப்பகுதியில் திடீர் சலசலப்பு எழுந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
காங்கிரசின் இந்த போராட்டத்தை பாஜ வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து பாஜ தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் அமித் மாளவியா கூறுகையில், அரசியல் எதிர்ப்பு என்பது ஜனநாயக உரிமை. அதற்காக இப்படி செய்வது என்பது ஒரு தேசிய அவமானம்.
காங்கிரஸ் இதற்கு வெட்கப்பட வேண்டும். மதிப்புமிக்க ஒரு மாநாட்டை இந்தியா நடத்தும் நேரத்தில் கண்ணியத்திற்கு எதிரான ஒரு செயலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. நம் நாட்டின் உலகளாவிய பிம்பத்தை அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
