குடியிருப்பு பகுதியில் பொது கழிப்பறை; கண்ணியத்துடன் வாழும் உரிமையை மீறும் செயல்: டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை

புதுடில்லி: ‘ஒருவரின் வீட்டின் அருகே பொது கழிப்பறை, திறந்தவெளி குப்பைத்தொட்டி ஆகியவை இருப்பது அரசியலமைப்பின் கீழ் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலில் கண்ணியத்துடன் வாழும் உரிமையை மீறும் செயல்’ என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தன் வீட்டின் அருகே அங்கீகரிக்கப்படாத வகையில், திறந்தவெளியில் குப்பைத்தொட்டி மற்றும் சிறுநீர் கழிப்பறை அமைக்கப்பட்டதற்கு எதிராக, டில்லி உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘என் வீட்டின் அருகே அங்கீகரிக்கப்படாத வகையில் பொது கழிப்பறையும், திறந்தவெளி குப்பைத் தொட்டியும் அமைக்கப் பட்டுள்ளன.’இவற்றை, இப்பகுதியில் உள்ள 150 குடியிருப்பு வாசிகள் அனைவரும் தங்கள் வீட்டின் கழிவுகளை கொட்ட, அக்குப்பை தொட்டியை தான் உபயோகப்படுத்துகின்றனர். எனவே, அவற்றை மாநகராட்சி நிர்வாகம் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, வாதிட்டார்.

இது தொடர்பான புகைப்படங்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றை ஆய்வுசெய்த நீதிபதி அமித் பன்சால் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர், சமர்ப்பித்துள்ள புகைப்படங்கள், அப்பகுதியின் தற்போதைய நிலையை தெளிவாக காட்டுகிறது. இது, சுற்றுவட்டார பகுதிகளில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இது, சந்தேகத்திற்கு இடமின்றி பெரும் தொந்தரவை அளிக்கும்.

இக்கழிவுகளைக் கொட்ட முறையான மூடப்பட்ட குப்பை தொட்டியை ஏற்பாடு செய்வதுடன், அவற்றை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்; இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள பொது கழிப்பறையை இடிக்க வேண்டும்.

சுகாதாரமான சூழல் என்பது ஆரோக்கியமான வாழ்க்கையின் ஒருங்கிணைந்த அம்சம்; ஆரோக்கியமான சூழல் இல்லாதது கண்ணியத்துடன் வாழும் உரிமையை சீர்குலைக்கும்.இது, அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் ஒருவர் வாழ்வதற்கான உரிமையை மீறும் செயல்.இவ்வாறு அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Source link