நாமக்கல்: மதுரை மாவட்டத்தில் நடக்க உள்ள கூட்டத்திற்கு பிறகு திமுக காணாமல் போகும். தேஜ கூட்டணி ஆட்சிக்கு வரும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் திமுக அரசு மதிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் வரும் 23ம் தேதி மக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும். கந்த சஷ்டி பாராயணத்தை இந்து மக்கள் பாராயணம் செய்ய வேண்டும். திமுகவிற்கு மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.
மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி மதுரை வரவுள்ளார். அங்கு நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.
ஏற்கனவே மதுராந்தகம் கூட்டம் திமுக அரசு வீட்டுக்கு செல்லக்கூடிய வழியை கொடுத்திருக்கிறது. இந்தக் கூட்டம் முடிந்த பின்னர், திமுக காணாமல் போகும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
