சென்னை: திருப்பூரில் பயங்கரவாதிகளை டில்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் பயங்கரவாத தடுப்பு படை என்ன செய்து கொண்டு இருந்தது? என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பயங்கரவாதிகளை டில்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திக்ள் வருகின்றன. கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, பயங்கரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
ஏற்கனவே 2022ல் கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, தமிழகத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல், சிலிண்டர் வெடிப்பு என சமாளிக்கவே முயன்றது இந்த விடியா திமுக அரசு. தொடர்ந்து பயங்கரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் என்ஐஏ போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதனைத் தடுக்க என்ன செய்தது? டில்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் பயங்கரவாத தடுப்பு படை என்ன செய்து கொண்டு இருந்தது?
இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்திற்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் தான் மக்களிடையே இருக்கிறது. எனவே, தமிழகத்தில் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும். மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
