சென்னை: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 23), நாளை மறுநாள் (பிப்ரவரி 24) ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேற்கு-வடமேற்கு திசையிலும் பிறகு வடகிழக்கு திசையிலும் நகரக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு
தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 23), நாளை மறுநாள் (பிப்ரவரி 24) ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
