ஜான்சி: ‘‘டில்லியில் நடந்த ஏ.ஐ., தாக்க உச்சி மாநாட்டில், காங்., இளைஞரணி தொண்டர்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தி, நம் நாட்டை அவமானப்படுத்திவிட்டனர். இது மிகவும் வெட்கக்கேடான செயல்,” என, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
டில்லியில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய சர்வதேச ஏ.ஐ., தாக்க உச்சி மாநாடு சமீபத்தில் நடந்தது. பல நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள், நிபுணர்கள், தொழிலதிபர்கள் என, பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், காங்., இளைஞரணி தொண்டர்கள், ஏ.ஐ., மாநாட்டையொட்டி நடந்த கண்காட்சி அரங்கிற்குள் சமீபத்தில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் புகுந்து, பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
‘அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டார்’ என முழக்கங்கள் எழுப்பினர். இதனால், கண்காட்சி அரங்கில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள ‘இண்டி’ கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது:
ஏ.ஐ., தாக்க உச்சி மாநாட்டில் காங்., இளைஞரணி தொண்டர்கள், மேல் ஆடை இல்லாமல் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தி, நம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை கொண்டு வந்துள்ளனர். பா.ஜ., அரசு மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அதற்காக சர்வதேச பிரதிநிதிகள் ஒன்றுகூடிய இடத்தில், நம் நாட்டை அவமானப் படுத்தும் வகையில் நடந்து கொண்டது சரியல்ல.
வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்பாக இப்படியொரு போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுத்து இருக்கக் கூடாது. நிச்சயம் தவிர்த்து இருக்க வேண்டும். காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்களின் இந்த செயல் வெட்கக்கேடானது . இவ்வாறு அவர் கூறினார்.
