மூணாறு: கேரள மாநிலம் தேவிகுளத்தில் பெண் தாசில்தார் காயத்ரியை, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,வான ராஜா மொபைல் போனில் மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, மூணாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க 2010ல் சிறப்பு தாசில்தார் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. சிறப்பு தாசில்தாராக காயத்ரி உள்ளார். இந்நிலையில், மூணாறு இக்கா நகரில் விதி மீறி நடக்கும் இரண்டு கட்டுமான பணிகள், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மருமகனின் கட்டடம் ஆகிய கட்டுமான பணிகளை நிறுத்த வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால், அதை மீறி கட்டுமான பணிகள் நடந்து வந்தன. எனவே சிறப்பு தாசில்தார் காயத்ரி நடவடிக்கை எடுக்க முயன்றார். அவருக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேவிகுளம் எம்.எல்.ஏ.,வான ராஜா மொபைல் போனில் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக வெளியான ஆடியோவில், ‘ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் இருந்து விலகி இருக்கவில்லை என்றால் கை, கால்களை முறித்து விடுவேன். ‘அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு கட்டுமான பணிகளுக்கு உதவுகின்றனர்.
நீங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வாருங்கள்; நான் யார் என்பதை காட்டுகிறேன்’ என எம்.எல்.ஏ., மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆடியோ உரையாடல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. ஏற்கனவே கட்டுமானத்திற்கு தடையில்லா சான்று வழங்க கோரி தேவிகுளம் தாலுகா அலுவலகம் முன் எம்.எல்.ஏ., ராஜா நடத்திய முற்றுகை போராட்டம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது பெண் தாசில்தாருக்கு மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
