நமது நிருபர்
ஓட்டுப்பதிவு இயந்திர, ‘பேலட் ஷீட்’டில், வேட்பாளரின் கலர் போட்டோ இடம்பெறச் செய்யும் புதிய நடைமு றையை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்துகிறது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு சுருக்கமுறை தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இறந்த, இரட்டைப் பதிவு, இடம்பெயர்ந்தோர் பெயர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
திருத்தம்
ஓட்டுச்சாவடிகளில் நீண்ட வரிசை, அதிக நேர காத்திருப்பை தவிர்க்கும் வகையில், 1,500க்கு பதிலாக 1,200 வாக்காளருக்கு ஓர் ஓட்டுச் சாவடி என, விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நிரந்தர வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர் கையில் கிடைக்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டை வினியோகம் வேகப் படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் விபரங்கள் சரிபார்ப்பை வேகப்படுத்தும் வகையில், பூத் சிலிப்களில், வரிசை எண், பாகம் எண் ஆகியவை தனித்துவமாக, பெரிய எழுத்தில் அச்சிடப்படுகின்றன. தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் வரிசை எண், பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய பேலட் ஷீட் பொருத்தப்படும். முந்தைய தேர்தல்களில், கருப்பு – வெள்ளை பேலட் ஷீட்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.
உத்தரவு
இதையடுத்து, பேலட் ஷீட் தயாரிப்பு தொடர்பான விதிமுறைகளில் தேர்தல் கமிஷன் திருத்தம் கொண்டு வந்துள்ளது. பேலட் ஷீட் தெளிவாக தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்முறையாக, பேலட் ஷீட்டில், வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் அச்சிடப்பட உள்ளன.
தேர்தல் நாளில், ஓட்டுப்பதிவு செய்ய வரும் வாக்காளர்கள், தங்கள் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்காக, ஓட்டுச்சாவடி மையங்களுக்கு வெளியே மொபைல்போன் பாதுகாப்பு கட்டமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன. ஐந்து மாநில தேர்தல்களிலும், புதிய நடைமுறைகளை செயல்படுத்த தேர்தல் கமிஷன் முனைப்பு காட்டி வருகிறது.
