சென்னை: பள்ளிகளில் இறுதி தேர்வுகள் துவங்கியுள்ளதால், பகல் நேரங்களில் மின்தடை செய்வதை மின் வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பணிகள் நடக்கும் இடங்களில் காலை, 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். ,இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வாடிக்கையாளர்களுக்கு மின் வாரியம் முன் கூட்டியே வெளியிடும்.
தற்போது, பள்ளிகளில் இறுதி தேர்வுகள் துவங்கியுள்ளன. விரைவில் பிளஸ் 2, மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளன. இது தவிர, ஏப்ரலில் சட்டசபை தேர்தலும் வர உள்ளது.
இதையடுத்து, பகல் நேரங்களில் மின்தடையை மின் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், இனி பகலில் ஐந்து மணி நேரம் மின் தடை இருக்காது. மின்னழுத்த பிரச்னை உள்ள இடங்களில் மட்டும் சனி, ஞாயிறுகளில் விடுமுறை நாட்களில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.
