இ – சேவை மைய ஊழியர்கள் தர்ணா; விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு

சென்னை: அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இ – சேவை, ஆதார் சேவை மையத் தில், 1,000க்கும் மேற்பட்ட தரவு உள்ளீட்டாளர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; மகப்பேறுக்கு சென்ற பெண் ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் கோபிகுமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம உதவியாளர்கள் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள், தங்களுக்கு, நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 5ம் தேதி முதல், தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 11ம் தேதி முதல், சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, சென்னை எழிலகம் வளாகத்தில், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும், கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுரவ விரிவுரையாளர்கள் தமிழ்நாடு அரசு கல்லுாரி, கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், யு.ஜி.சி., உத்தரவின்படி, 57,000 ரூபாய் வழங்க வேண்டும்; மாதந்தோறும் கால ஊதியம்.

தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம்; ஓய்வு பெறுவோருக்கு பணிக்கொடை; ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் ஆகிய, கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை, பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.

இதன் காரணமாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாலை நேர வகுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த சூழலில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்கக வளாகத்தில், கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

அதன்பின்னரும், அரசு கண்டுகொள்ளாததால், கவுரவ விரிவுரையாளர்கள், மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

கல்லுாரிகளில் வகுப்பு களை புறக்கணித்து, பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

Source link