`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' – ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

உடல்நலக்குறைவால் நல்லகண்ணு சிகிச்சையில் இருக்கும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவ்வப்போது மூச்சுத் திண்றல் ஏற்படுவதும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுமாக, உடல்நலம் தேறி சீராகுவதுமாகவே இருந்தது. இந்த நிலையில், நேற்று அவர் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டதாக தெரிகிறது. உடனே அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

நேற்று இரவே முதல்வர் ஸ்டாலின் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது வென்டிலேஷன் முறையில் அவருக்கு சுவாசம் செலுத்தப்படுகிறது என்றத் தகவலும் கிடைத்தது. காலை முதல் திருமாவளவன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்து தோழர் நல்லகண்ணுவின் உடல்நலன் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தோழர் நல்லகண்ணு குறித்து மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், “ நல்லகண்ணு (வயது 101) அவர்கள் நோய்த்தொற்று மற்றும் இணைநோய்களால் (இரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை) பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு மருத்துவத்துறை நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 23.02.2026 அன்று அவருடைய உடல்நிலையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

நல்லகண்ணு
நல்லகண்ணு

அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன், 24 மணிநேர தொடர் அதிதீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link