பாட்னா: பீஹார் சட்டப்பேரவையில், எதிர்க்கட்சியினரின் ‘துப்பாக்கி மற்றும் குண்டு’ என்ற விமர்சனத்தால் முதல்வர் நிதிஷ் குமார் கடும் கோபமடைந்தார்.
பீஹார் சட்டப்பேரவையில் இன்று(பிப்ரவரி 24) பாட்னாவில் ஊர்க்காவலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, அவர்கள் மீது போலீஸ் துறை நடத்திய தடியடியைக் கண்டித்து, ஆர்ஜேடி தலைமையிலான எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எதிர்கட்சியினர், அப்போது துப்பாக்கி, குண்டுகளின் ஆட்சி நடத்துவதாக கோஷமிட்டனர்.இந்த மோதலால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. எதிர்கட்சியினரின் அமளியை தொடர்ந்து பொறுமையிழந்த முதல்வர் நிதிஷ்குமார், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்.
சட்டப்பேரவையில் நிதிஷ்குமார் பேசியதாவது:
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. பாஜ தலைமையிலான கூட்டணி, தேர்தலில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 202 இடங்களைக் கைப்பற்றி பலத்துடன் உள்ளோம்.
ஆர்.ஜே.டி கட்சியினர் சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்து வெறும் 25 இடங்களை மட்டுமே பெற்றனர். ஆர்.ஜே.டி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்ததது, மக்கள் மாலை 5 மணிக்கு மேல் வெளியே வர அஞ்சினர்.
இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.
நிதிஷ்குமார் பேசுகையில், சட்டசபையில் எங்களுடைய கூட்டணியின் பலம் 202 என்று கூறுவதற்கு பதிலாக இரண்டாயிரத்து இரண்டு என்று தவறுதலாக கூறினார்.
