வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த வீரர்கள், முன்கூட்டியே பூமிக்கு திரும்பியது குறித்து நாசா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ 11 விண்கலத்தின் பைலட்டும், கமாண்டாருமாக பணியாற்றிய விண்வெளி வீரர் மைக் பின்கேவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு காரணமாகவே, க்ரூ11 குழுவைச் சேர்ந்த 4 பேரும் முன்கூட்டியே பூமிக்குத் திரும்பும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்; ஜனவரி 7ம் தேதி விண்வெளி நிலையத்தில் இருந்தபோது, எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது சக விண்வெளி வீரர்களின் உடனடி நடவடிக்கை மற்றும் நாசா மருத்துவர்களின் வழிகாட்டுதலால் உடல்நிலை விரைவில் சீரானது.
மேல் பரிசோதனைக்குப் பிறகு, க்ரூ11 குழுவை முன்கூட்டியே பூமிக்கு அழைத்து வருவதே பாதுகாப்பானது என நாசா முடிவு செய்தது. இது ஒரு அவசரநிலை அல்ல. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இல்லாத அதிநவீன மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பூமிக்கு வர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஐந்தரை மாதங்கள் விண்வெளியில் இருந்த பிறகு, ஜனவரி 15ம் தேதியன்று சான் டியாகோ கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கினோம். விண்வெளிப் பயணம் என்பது ஒரு மிகப்பெரிய பாக்கியம். சில நேரங்களில் நாம் சாதாரண மனிதன் என்பதை நினைவுபடுத்தும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளி வீரர் மைக் பின்கே தற்போது ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் தங்கி, வழக்கமான உடல் சீரமைப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
