தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 3 ஆண்டுக்கு பின் 8.25 சதவீதமாக உயர்வு

புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, நிதி சூழலுக்கு ஏற்ப, புதுடில்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு மாற்றி அமைத்து வருகிறது.

கடந்த 2022 நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இது கடந்த 1978 நிதியாண்டுக்கான 8 சதவீத வட்டி விகிதத்துக்கு பின் மிக குறைவாகும். கடந்த நிதியாண்டில் இது 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு கூட்டம், புதுடில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 2024ம் நிதியாண்டில், வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மத்திய நிதித்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, பயனாளர்களின் கணக்குகளில் வட்டித்தொகை வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link