சென்னை: ஷாலிமார் – சென்னை இடையே இயக்கப்படும் ரயில் உள்பட 4 சிறப்பு ரயில் சேவைகளை, விரைவு ரயில் சேவைகளாக மாற்றம் செய்த ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அவரது அறிக்கை; தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்களை, வழக்கமாக இயங்கும் வகையிலான விரைவு ரயிலாக மாற்றுவது தொடர்பான கோரிக்கையை, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.
அவ்வகையில், கோல்கட்டாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஹைதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற ரயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு ரயில்கள், விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு வரும், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசிற்கும், மத்திய ரயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
