சென்னை: வளர்ந்து வரும் ஓ.டி.டி., பயன்பாடு, பிராந்திய உள்ளடக்க உற்பத்தியை விரிவுபடுத்துதல், எல்லை தாண்டிய ஒத்துழைப்பு, அதிகரித்து வரும் முதலீட்டால் ஈர்க்கப்பட்டு, ‘கன்டென்ட் இந்தியா 2026’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் வரும் மார்ச் 16 முதல், 18ம் தேதி வரை நடக்கிறது.
‘டிஷ் டிவி’யும், ‘சி 21 மீடியா’வும் இணைந்து, ‘கன்டென்ட் இந்தியா 2026’ நிகழ்ச்சியை நடத்துகின்றன. முன்னணி ஒளிபரப்பாளர்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள், திரைப்பட ஸ்டுடியோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்களின் உயர் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து, ‘டிஷ்’ தொலைக்காட்சியின் இந்திய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ் தோபால் கூறியதாவது:
கன்டென்ட் இந்தியா, ஒரு அடிப்படை தொழில் துறை தேவையை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்தாண்டு மூன்று நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சி அர்த்தமுள்ள உரையாடல், ஒத்துழைப்பு, நீண்ட கால கூட்டாண்மைகளை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.
கன்டென்ட் இந்தியா வாயிலாக படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், தளங்கள், ஸ்டுடியோக்கள், வினியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் எங்களுடன் சேர்ந்து, தொழில் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியை வடிவமைக்க உதவுமாறு அழைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
