சென்னை: தமிழகத்தில், காடுகளில் இருந்து யானைகள், ஊருக்குள் வருவதை தடுக்க, தொங்கும் வகை சோலார் மின்சார வேலிகள் அமைக்க, ஒப்பந்த நிறுவனங்கள் முன் வராதது, வனத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 2025ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 3,170 யானைகள் உள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 107 அதிகம் என கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான வாழிடங்களின் பரப்பளவு, விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால், உணவு, தண்ணீர் தேடி, யானைகள் ஊருக்குள் வருவது அதிகரிக்கிறது.
தமிழகத்தில், கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில், யானைகள் வருகையால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுகிறது. இதை கருத்தில் வைத்து, வனத்துறை சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், யானைகள் வருவதை தடுக்க, எல்லைப் பகுதிகளில், மின்சார வேலிகள் அமைப்பதிலும், பிரச்னைகள் ஏற்படுகின்றன. புதிய முயற்சியாக, தொங்கும் வகை சோலார் மின்சார வேலிகள் அமைக்க, வனத்துறை திட்டமிட்டது.
இது குறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒடிஷா மாநிலத்தில், முதல் முறையாக யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், தொங்கும் வகை சோலார் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில், கன்னி வாடி வனச்சரக பகுதியில், 1.60 கோடி ரூபாய் செலவில், 20 கி.மீ., தொலைவுக்கு தொங்கும் மின்சார வேலிகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த ஆண்டு ‘டெண்டர்’ கோரப்பட்டது. இதில் யாரும் பங்கேற்கவில்லை.
அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும், ‘டெண் டர்’ கோரப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனங்கள் முன்வராதது ஏன் என, விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
