லண்டன்: பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு பெரும் பங்களித்த கிழக்கிந்திய கம்பெனி, 170 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக மூடப்பட்டது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த வணிகர்களால் கூட்டு முதலீட்டு நிறுவனமாக, 1600ம் ஆண்டு துவங்கப்பட்டது கிழக்கிந்திய கம்பெனி. வர்த்தகத்திலிருந்து படிப்படியாக இந்தியாவில் ஆட்சி அதிகாரம் பெற இது அடித்தளமாக அமைந்தது. இதையடுத்து, 1857 சிப்பாய் கலகத்துக்குப் பின், 1858ல் பிரிட்டன் அரசுக்கு மாற்றப்பட்டது.
விக்டோரியா மகாராணியின் ஆட்சி துவங்கிய பின், 1874ல், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டது. இதையடுத்து, 135 ஆண்டுகளுக்கு பின் இந்நிறுவனத்தை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா என்பவர் 2010ல் மீண்டும் துவங்கினார்.
அவர், 2010ல் கிழக்கிந்திய கம்பெனியின் பெயர் உரிமையை வாங்கினார். லண்டனின் மேபேர் பகுதியில் ஆடம்பர தேநீர், உணவு பொருட்கள், சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் கடைகளாக அதை மாற்றினார். ஆனால், தற்போது இந்நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய கிழக்கிந்திய கம்பெனிக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
