புதுடில்லி: டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் உள்பட 23 பேரை விடுதலை செய்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சியின் போது, புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. தனியார் மதுபான உற்பத்தியாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, அதிக சலுகைககள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தன. இந்தப் பணத்தை கோவா சட்டசபை தேர்தலுக்கு ஆம்ஆத்மி செலவு செய்ததாகவும் புகார்கள் எழந்தன. இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தன.
இந்த வழக்கில் டில்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதேபோல, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிஷோடியா மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்ட முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. தீர்ப்பை கேட்டதும் கெஜ்ரிவால் கண்கலங்கினார்.
டில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம்ஆத்மி கட்சியினர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
