பொதுசேவைக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் சபாநாயகர் விஜேந்தர் குப்தா வலியுறுத்தல்

புதுடில்லி: “சிறந்த பொது சேவைக்கு எம்.எல்.ஏ.,க்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்,” என, டில்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா பேசினார்.

டில்லி எம்.எல்.ஏ.,க் களுக்கான வருடாந்திர இலவச முழு உடல் மருத்துவப் பரிசோதனை திட்டத்தை, வடக்கு டில்லி பரமானந்த் மருத்துவமனையில் நேற்று துவக்கி வைத்த சபா நாயகர் விஜேந்தர் குப்தா பேசியதாவது:

சிறந்த பொது சேவைக்கு எம்.எல்.ஏ.,க்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.

மக்களுடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகள் சுறுசுறுப்பாக, பணிகளை செய்ய வேண்டியிருப்பதால் இதுபோன்ற மருத் துவ திட்டங்கள் அவசியம்.

மக்கள் பிரதிநிதிகள் உடல் ரீதியாக தகுதியுடனும், மன ரீதியாக ஆரோக்கியமாகவும், உணர்ச்சி ரீதியாக நேர்மறையாகவும் இருக்கும்போது மட்டுமே திறமையான பொது சேவை சாத்தியமாகும்.

குறிப்பாக, 40 வயதுக்குப் பின், மருத்துவப் பரிசோதனைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

டில்லி அரசின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் அறிவித்த வருடாந்திர மருத்துவ பரிசோதனை திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சட்டசபை செயலகத் துக்கு அருகில் இருப்பதால், பரமானந்த் மருத்துவமனை இந்தத் திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும், 14ம் தேதி வரை ஒரு நாளைக்கு ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல் நாளான நேற்று, எம்.எல்.ஏ.,க்கள் திமர்பூர் – சூர்யா பிரகாஷ் காத்ரி, வஜிர்பூர் – பூனம் பரத்வாஜ் மற்றும் கிராரி – அனில் ஜா ஆகிய மூன்று பேர் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர்.

Source link