சென்னை: ”சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, அவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை தி.மு.க., அரசு செய்கிறது; அதை முறியடிக்கும் வகையில், வேலுார் இப்ராஹிம் அற்புதமான நுாலை எழுதியுள்ளார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பா.ஜ., சிறுபான்மை அணி தேசியச் செயலர் வேலுார் சையத் இப்ராஹிம் எழுதிய, ‘பாரதம் 2014க்கு முன் – பின் இஸ்லாமியர்களின் நிலை’ என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று நடந்தது.
நுாலை, நயினார் நாகேந்திரன் வெளியிட, முன்னாள் கவர்னர் தமி ழிசை பெற்றுக் கொண்டார். பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஹண்டே உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
தமிழிசை பேசும்போது, ”இஸ்லாமியர்கள் இடையே வேற்றுமையை ஏற்படுத்தி கொண்டிருப்பது, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் தான். குழந்தைகள் பர்தா அணிந்து செல்வதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். அழகான ஆடை அணிந்திருப்பர்; அதைக்கூட வெளியே தெரியாமல் மறைத்திருப்பர். இதை பற்றி பேசினால், மதத்திற்கு எதிராக பேசுகின்றனர் என்று கூறுவர்,” என்றார்.
அதிகம் கடன்
நயினார் நாகேந்திரன் பேசியதாவது: சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, அவ்வினத்தவரை பிரித்தாளும் சூழ்ச்சியை தி.மு.க., அரசு செய்கிறது. அதை முறியடிக்கும் வகையில், வேலுார் இப்ராஹிம் அற்புதமான நுாலை எழுதியுள்ளார்.
முத்தலாக் சட்டம், வக்ப் சட்டம் என எந்த சட்டமாக இருந்தாலும், ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்வதற்காகத் தான் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின், ‘முத்ரா’ கடன் திட்டத்தில், இஸ்லாமியர்கள் அதிகம் கடன் வாங்கியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
வேலுார் சையத் இப்ராஹிம் பேசியதாவது: என் வாழ்வில், நான் கத்தியின் மீது நடந்து கொண்டிருக்கிறேன்; எந்த நேரம் வேண்டுமானாலும், எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கும் என்று தெரியும்.
லட்சியம்
எனக்கு பாதுகாப்பு கொடுக்கிற போலீசார் முதல் உயர் அதிகாரிகள் வரை சொன்னது, ‘ரொம்ப உஷாராக இருங்கள்; பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம்’ என்கின்றனர்.
நான் சொன்ன கருத்துகள், அனைத்து மக்களிடமும் போக வேண்டும் என்பதற்காகத் தான், இந்த நுாலை எழுதியுள்ளேன். பா.ஜ.,வில் தேசத்திற்காக உழைக்கிற ஒரு இஸ்லாமியனாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ளேன்.
இஸ்லாமியர்கள் மத்தியில் எந்த கொள்கை அரசியலும் செய்யாமல், எது சத்தியமோ, தர்மமோ, எது உண்மையோ, அதை எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
