கோவை: கோவை மாநகராட்சி 73வது வார்டு கவுன்சிலர் (தி.மு.க.,) சந்தோஷ் மகள் வெண்பா, தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு கிளம்பியபோது, உடல் நலம் பாதிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரிந்ததும், அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மூளை செயலிழந்ததால், சிறுநீரகம், கல்லீரல், தோல், கண் உள்ளிட்ட ஏழு உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டன.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று கோவை வந்திருந்த முதல்வர் ஸ்டாலினிடம், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, சிறுமியின் பெற்றோர் வசிக்கும் ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு முதல்வர் சென்றார். சிறுமியின் தந்தையான சந்தோஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யாவிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்த அவர், ஆறுதல் கூறினார்.
தனது சமூக வலைதளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், கூறியிருப்பதாவது:
உடல் உறுப்புகளை கொடையளித்து இறவாப் புகழை எய்துள்ள குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள். பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மனித நேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறப்புகளை கொடையளித்த பெற்றோர் சோமு, சுகன்யா ஆகியோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்.
சோமு, தி.மு.க., நிர்வாகியாக இருந்து மக்களுக்கு தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உடல் உறுப்புகளை கொடையளிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். கொடையளிப்பது இந்திய மாநிலங்களில் அதிகளவு அதிகரித்து வருகிறது. இதுவரை 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடந்திருக்கிறது. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்து செயல்படும் தமிழ்நாடு வளரட்டும். இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் இந்த கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள். இவ்வாறு, முதல்வர் பதிவிட்டுள்ளார்.
