மேட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் வீடுகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால், இளைஞர்கள் சொந்த வீடு வாங்க நுாதன வழிகளை தேடி வருகின்றனர்.
ஸ்பெயின், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் வீட்டு விலை மற்றும் வாடகை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளில் வீடுகளின் விலை வருமானத்தை விட, 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஐரோப்பிய கமிஷன் ஆய்வு தெரிவிக்கிறது.
ஸ்பெயினில் ஊதியம், 26 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், வீடுகளின் விலை, 81 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், சொந்த வீடு வாங்க நினைக்கும் இளைஞர்களுக்கு அது எட்டாக்கனியாகி வருகிறது. குறிப்பாக மாட்ரிட், பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் வீடு பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது.
எனவே, ஸ்பானிஷ் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று, அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் படுக்கை அறைகளை விற்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, ஒரு படுக்கை அறை, 73 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில், ‘பேர்வியூ’ என்ற நிறுவனம், ‘படி அப்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் நண்பர்கள், உறவினர்கள் சேர்ந்து வீடு வாங்கலாம். முழு சொத்து வாங்க முடியாதவர்களுக்கு, ‘ப்ராப்ஹீரோ’ என்ற நிறுவனம் ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தில் வாடகை வீடுகளில், உள் வாடகைக்கு விட்டு செலவை ஈடுசெய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
