புதுடில்லி: டில்லி ஜே.என்.யு., பல்கலை துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் பதவி விலக வேண்டும், உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் மீது இன பாகுபாடுகளை தடுக்க, ரோஹித் சட்டத்தை இயற்ற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலையின் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் பிரிவான ஜே.என்.எஸ்.யு.,வினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, பல்கலை வளாகத்தில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். தடையை மீறி ஜே.என்.எஸ்.யு., மாணவர் அமைப்பின் தலைவர் அதிதி மிஸ்ரா தலைமையில் மாணவர்கள், பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் பேரணி சென்றனர்.
பல்கலை வடக்கு நுழைவாயில் அருகே போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால், மாணவர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஒரு சில மாணவர்கள், தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மீது மாணவர்கள், தாங்கள் வைத்திருந்த தடிகளைக் கொண்டு தாக்கினர்.
சிலர் போலீசாரை கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, மாணவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.
இந்த விவகாரத்தில் ஜே.என்.எஸ்.யு., மாணவர் அமைப்பின் தலைவர் அதிதி மிஸ்ரா உட்பட, 14 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
