காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள வேட்லபாலம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை திடீரென வெடித்ததில், 21 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆந்திராவில் தெலுங்கு தேசத்தை சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தே.ஜ., கூட்டணி அரசு நடக்கிறது. இம்மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள வேட்லபாலம் கிராமத்தில் சூர்யா பட்டாசு தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது.
இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணி அளவில் திடீரென பட்டாசு ஆலை பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில், ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். உடல்களின் பாகங்கள் நாலாப்புறமும் துாக்கி வீசப்பட்டன.
சில கி.மீ., துாரம் வரை பட்டாசு ஆலையின் வெடிச் சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் பதறி அடித்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.
உறைய வைத்த சோகம்
பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இந்த கோர சம்பவத்தில், தொழிலாளர்களின் உடல்களும், உடல் பாகங்களும் அருகில் இருந்த நெல் வயல்களில் சிதறிக் கிடந்தன.
அவற்றை உர பைகளிலும், சாக்கு பைகளிலும் மூடி பொதுமக்கள் மீட்டுக் கொண்டு வந்தது, காண்போரின் நெஞ்சத்தை உறைய வைப்பதாக இருந்தது.
இதுவரை 21 தொழிலாளர்கள் உயிரிழந்துஉள்ளனர். 90 முதல் 100 சதவீத தீக்காயங்களுடன் சில தொழிலாளர்கள் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வெடி விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆலைக்குள் அளவுக்கு அதிகமான பட்டாசுகளை இருப்பு வைத்ததே வீரியத்துடன் வெடித்து சிதற காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அருகில் உள்ள நெல் வயல்களில் சிதறிக் கிடக்கும் உடல் பாகங்களை ‘ட்ரோன்கள்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
விசாரணைக்கு உத்தரவு
சம்பவம் குறித்து பேசிய ஆந்திர அமைச்சர் கண்டூலா துர்கேஷ், ”பட்டாசு ஆலையில் 30 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
”மாநிலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பட்டாசு ஆலை விபத்து இது. காயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
”வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் அனைவரும் ஏழை, எளிய மக்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நிச்சயம் உதவி செய்வார்,” என்றார்.
பட்டாசு ஆலை விபத்துக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் இரங்கல்
இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ‘உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உடனடியாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
‘காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாய் வழங்கவும் ஆணையிட்டுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் தருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
‘காயமடைந்தோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என, கூறியுள்ளார்.
தலா ரூ.20 லட்சம்
வெடி விபத்து சம்பவத் தால், ஆந்திர முதல்வர் சந் திரபாபு நாயுடுவும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”வேட்லபாலம் கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் மிகுந்த மன வலியை தருகிறது. தொழிலாளர்கள் பலர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
”உயிரிழந்தோர் குடும் பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். தேவையான உதவிகளும் உடனடியாக வழங்கப்படும். மீட்பு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்,” என்றார்.
