சென்னை: ”மக்களிடையே ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும். மக்களை பிரிக்க நினைக்கும் கும்பல்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கிராம கோவில் பூசாரிகள் மாநாடு – 2026, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.
இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, விழா மலரை வெளியிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரும், கிராம கோவில் பூசாரிகள் பேரவை அறங்காவலரும், ‘தினமலர்’ நாளிதழ் திருச்சி, வேலுார் பதிப்புகளின் வெளியீட்டாளருமான ஆர்ஆர்.கோபால்ஜி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஸ்ரீ பெரும்புதுார் ஜீயர் ராமானுஜ எம்பார் சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் மற்றும் அறநிலையத் துறை செயலர் மணிவாசகன், துறை ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமுதாயத்தில் ஒரு அங்கம்
மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க., அரசு எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வது, வெறும் வாய் வார்த்தைக்காக அல்ல. சொற்களில் சொல்வதை செயலில் நிரூபிப்பதற்கு அடையாளமே இந்த மாநாடு. உண்மையான ஆன்மிக அன்பர்களும், இறை பற்றாளர்களும் விரும்பும் அரசு இது.
இந்த மாநாட்டை பார்க்கையில், சிலருக்கு வெறுப்பாக இருக்கும். ஏன், சிலருக்கு எரிச்சல் கூட வரலாம்.
கிராம கோவில்களில் பணியாற்றும் கிராம பூசாரிகளான நீங்களும், சமுதாயத்தில் ஒரு அங்கம்தான். உங்கள் வாழ்வில் விடியல் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இந்த அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களின் உரிமைகளை நிலைநிறுத்திய, திராவிட இயக்கத்தின் உணர்வை , இந்த அரசு தான் நிறைவேற்றியுள்ளது. ஒரு காலத்தில் கோவில் இருக்கும் தெருக்களில் கூட, பலரால் நுழைய முடியாத நிலை இருந்தது.
அதை மாற்றி, தற்போது கோவிலுக்குள் அனைத்து மக்களும் வரலாம்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; அன்னை தமிழில் அர்ச்சனை செய்யலாம் என மாற்றியுள்ளோம்.
இந்த மாற்றம்தான், நாம் விரும்புகிற சமூக முன்னேற்றம். இதைத்தான் உண்மையான இறை பற்றாளர்களும் விரும்புகின்றனர்.
தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, தி.மு.க., அரசு பொறுப்பேற்ற 1,759 நாட்களில், 4,335 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்குகள் நடந்துள்ளன.
அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டத்தின் கீழ், 29 அர்ச்சகர்களை பணி நியமனம் செய்துள்ளோம்; 12 பெண் ஓதுவார்கள் உட்பட, 46 ஓதுவார்களை பணி நியமனம் செய்துள்ளோம்.
மேலும், 19,000 ஒரு கால பூஜை திட்ட கோவில் அர்ச்சகர்களுக்கு, மாத ஊக்கத்தொகையாக 1,500 ரூபாய் வழங்கி வருகிறோம். 226 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 616 குடியிருப்புகளை கட்டித் தந்துள்ளோம்.
சமரசமும், சமத்துவமும்
கிராம கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் 4,000 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான, 8,140 ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டுள்ளோம்.
சமரசமும், சமத்துவமும்தான் ஆன்மிக பாதையாக இருக்க முடியும். சமத்துவத்தை போற்றும் அனைவரையும் நாம் போற்றுவோம். மக்களும், சுயமரியாதை உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். அதை நாம் செய்வதால்தான், ஆன்மிக பெரியோர்கள் தொடர்ந்து நமக்கு ஆதரவளிக்கின்றனர்.
தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுதும் சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைப்பெற வேண்டும். மக்களிடையே ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும். மக்களை பிரிக்க நினைக்கும் கும்பல்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
