இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலில், வீரர்கள், பயங்கரவாதிகள் என, 500 பேர் உயிரிழந்துள் ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அண்டை நாடாக இருக்கிறது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் அமெரிக்க படைகள் வெளியேறிய பின், தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அதன்பிறகே, டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தலைதுாக்க துவங்கியதாக பாக்., குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், டி.டி.பி., பயங்கரவாதிகளுக்கு எதிராக, ‘ஆப்பரேஷன் கஜப் லில் ஹக்’ என்ற பெயரில் ஆப்கனின் காபூல், கந்தஹார், பக்டியா, நங்கர்ஹார், ஜலாலாபாத், உள்ளிட்ட பல நகரங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள், 18 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில், 53 இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் வீரர்கள் 55 பேர் கொல்லப்பட்டதாகவும், அந்நாட்டின் பல்வேறு ராணுவ முகாம்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தலிபான்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது பகிரங்க போர் என்ற நிலை வந்துவிட்டதாக பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்தார்.
அதன்படி பாக்., ராணுவம் நடத்திய தாக்குதலில், தலிபான் ராணுவத்தினர், பயங்கரவாதிகள் உட்பட 331 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மே லும், 104 ஆப்கன் ராணுவ சோதனைச் சாவடிகள், 163 டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 37 இடங்களில் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் பாக்., ராணுவம் கூறியுள்ளது.
தலி பான்கள் மீதான தாக்குதலை கண்டித்து டி.டி.பி., பயங்கரவாதிகள், பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில், புதிய பழிவாங்கல் நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.
பெஷாவர், பன்னு, புத்பெர், நவ்ஷேரா, வடக்கு வாசிரிஸ்தான் மற்றும் கோஹாட் உள்ளிட்ட ஆறு நகரங்களில் நேற்று ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீஸ் ஸ்டேஷன்கள், பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், 7 போலீசார் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலரும், பல்வேறு நாட்டு தலைவர்களும், இரு தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்றும், அமைதி பேச்சுக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
