கோவை: பாரதியார் பல்கலையில், பிஎச்.டி., முடிக்காத துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
பாரதியார் பல்கலையில், பிப்., 14 ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, 1,271 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இதில், 1,110 பேர் பிஎச்.டி., பட்டம் பெற்றனர். இந்நிலையில், 19 ம் தேதி மாலை பல்கலையில் நடந்த முனைவர் பட்டம் வழங்கும் விழாவில், பிஎச்.டி., மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பல்கலை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக இது நடந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பல்கலை வேந்தரான கவர்னரிடம் இதற்கு அனுமதி பெற்றதாக தெரியவில்லை. மேலும், விழாவில், சென்னை பெரும்பாக்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். ஆனால், பல்கலை மானியக்குழு விதி மற்றும் பாரதியார் பல்கலை சட்ட விதிகளை மீறி, பல்கலையின் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினராக இருக்கும் துர்கா சங்கரும் பிஎச்.டி., மாணவர்களுக்கு பட்டம் வழங்கியது தான் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக முனைவர் பட்டம் பெற்றவர்கள் அல்லது உயர்ந்த கல்வியாளர்களே பட்டங்களை வழங்குவர். ஆனால், துர்கா சங்கர் முனைவர் பட்டம் பெறவில்லை. அவர் பட்டம் வழங்கியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலை சார்பில் வழங்கப்பட்ட பத்திரிகை குறிப்பில், துர்கா சங்கர் விழாவுக்கு தலைமை வகித்து பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவர் பட்டங்களை வழங்கியதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், பல்கலை சார்பில் அனுப்பப்பட்ட புகைப்படத்தில் துர்கா சங்கர் பட்டங்களை மாணவர்களுக்கு வழங்கும் காட்சிகள் உள்ளன.
துணை பட்டமளிப்பு நடத்த அனுமதி அளித்தது யார், அதில், சிறப்பு விருந்தினரை தவிர்த்து துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பட்டம் கொடுக்க யார் அனுமதி அளித்தது ஆகியவை குறித்து பல்கலை மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பல்கலை பதிவாளர் ராஜவேல் கூறுகையில்,”அன்றைய தினம் நான் பணிக்காக வெளியில் சென்றிருந்தேன். சிறப்பு விருந்தினர் தான் பட்டங்களை கொடுத்தார். ஒரு சில பட்டங்களை மட்டுமே துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் கொடுத்தார். ஒன்றிரண்டு பட்டங்கள் கொடுப்பது தவறில்லையே,” என்றார்.
