லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, ‘லஞ்சம் – என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் ‘தினமலர்’ இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:
பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்:
மதுரையில் ஒரு வர்த்தக கட்டடம் கட்ட, 2021ல், உள்ளூர் திட்டக் குழுமத்திடம் கட்டட அனுமதிக்குச் சென்றேன். அங்கு ரூ.5 லட்சம் பறித்த பிறகே, கோப்பு நகர்ந்தது. அடுத்து, நகரத் திட்ட அலுவலருக்கு (டி.பி.ஓ.,) ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்த பிறகே அங்கு ஒப்புதல் கிடைத்தது. எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் கட்டடத்தைக் கட்டி முடித்தேன்.
நிறைவுச் சான்றிதழ் கிடைத்தால்தான், மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால், விண்ணப்பித்தபோது அலையவிடப்பட்டேன். டி.பி.ஓ., நேரில் வந்து ரூ.75 ஆயிரம் வாங்கிய பிறகே, சான்றிதழ் கொடுத்தார். அதன்பின், மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால், நீங்கள்தான் டிரான்ஸ்பார்மர் வாங்க வேண்டும் என மின்வாரியத்தில் தெரிவித்தனர். கோவையில் அவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்துக்குச் சென்று, ரூ.5 லட்சம் செலவு செய்து, டிரான்ஸ்பார்மர் வாங்கி வந்து, நிறுவினேன். அதன் பிறகும் மின் இணைப்பு தரவில்லை. வர்த்தக நிறுவனம் செயல்பட வேண்டுமே என்பதற்காக, மின் வாரியத்தினர் கேட்ட ரூ.3.5 லட்சம் லஞ்சம் கொடுத்தேன். 39 நாட்களாக வராத இணைப்பு, லஞ்சம் கொடுத்ததும் உடனே வந்தது.
வர்த்தக கட்டடம் செயல்படத் தொடங்கியது. அதன்பிறகு, அரசியல்வாதிகள் மிரட்டத் தொடங்கினர். முறையாக சான்று, அனுமதி பெற்றிருந்தும், விதிமீறல் இருப்பதாக, அப்போதைய மாநகராட்சி 2ம் மண்டலத் தலைவரின் கணவர், சீல் வைத்து விடுவதாக மிரட்டினார். வேறு வழியின்றி அவருக்கும் ரூ.9 லட்சம் கொடுத்தேன். இப்படி, எவ்வித விதிமீறலும் இல்லாமல், சட்டப்படி நடக்க வேண்டிய நடை முறைகளுக்காகவே, ரூ.28.25 லட்சம் லஞ்சம் கொடுத்தேன். இதற்கு ஒரு விடிவே இல்லையா. இவர்கள் மீது யார்தான் நடவடிக்கை எடுப்பது; என்ன சொல்லி அழ?
தொடரும்…
![]() |

