சென்னை: பிரதமர் தமிழகம் வந்த நாளில் திமுக அரசு போராட்டத்தைத் தூண்டிவிட்டது கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜ

சென்னை: பிரதமர் தமிழகம் வந்த நாளில் திமுக அரசு போராட்டத்தைத் தூண்டிவிட்டது கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

நேற்றைய தினம் நமது பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், ஈரான் தாக்குதல் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளும் விசிகவும் இணைந்து சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்து போராட்டம் நடத்தியுள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போன்றோர் அறவழியில் போராடிய போது அவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கைவிலங்கு பூட்டி முடக்கப் பார்த்த ஏவல்துறை நேற்று மட்டும் வேடிக்கை பார்த்தது ஏன்?

நியாயமான கோரிக்கைகள் வலியுறுத்தி போராடும் சராசரி பொதுமக்களுக்கு ஒரு நியாயம், திமுக-வின் கூட்டணிக் கட்சியினருக்கு ஒரு நியாயமா? குறிப்பாக, பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், வேண்டுமென்றே திட்டமிட்டு தலைநகரிலேயே கூட்டணிக் கட்சியினரைப் போராடச் செய்து, பிரதமரின் பாதுகாப்பில் களங்கம் ஏற்படுத்த திமுக அரசு திட்டமிட்டதா எனும் சந்தேகம் எழுகிறது.

ஒருவேளை, தனது கூட்டணிக் கட்சியினர் பங்கெடுக்கும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறனைக் கூட திமுக அரசு இழந்துவிட்டது போலும். காரணம் எதுவாயினும், பிரதமர் தமிழகம் வந்த தினத்தில் திமுக அரசின் இந்த மெத்தனப்போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Source link