துபாய்: துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது; மேற்காசிய நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், இந்தியாவில் இருந்து துபாய் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவுகள் இன்னும் ஆன்லைனில் நடந்து கொண்டிருக்கின்றன.
மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது, ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக, தங்கள் வான்வெளியை பல நாடுகள் தற்காலிகமாக மூடியுள்ளன.
இதனால், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களின் விமான போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
மறு அறிவிப்பு வரும் வரை, அனைத்து வருகை மற்றும் புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களுக்கு பயணியர் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்தகைய அறிவிப்பு வெளியான நிலையில், ‘ மேக்மைட்ரிப், ஏர் இந்தியா, இண்டிகோ, எமிரேட்ஸ், எதிஹாட் ஏர்வேஸ், கத்தார் ஏர்வேஸ் ‘ உட்பட பல நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ஆய்வு செய்தபோது, கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் மட்டுமே, தற்போது டிக்கெட் இல்லை என்ற வாசகம் வருகிறது.
பிற விமான நிறுவனங்கள் மற்றும் பயண ஏற்பாடு ஆன்லைன் தளங்களில் இன்னும் துபாய்க்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடிகிறது. மேலும், இதற்கான கட்டணங்களும் வழக்கத்தை விட குறைவு என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.
முன்பதிவு செய்ய முடிந்தாலும், உண்மையான விமான புறப்பாடு, வான்வெளி மீண்டும் திறக்கப்படுவதை பொறுத்தே செயல் பாட்டுக்கு வரும்.
ஆகவே, முன்பதிவு செய்தாலும், விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தொடர்புகள் மற்றும் விமான நிலைய ஆலோசனைகளை கண்காணிக்குமாறு பயணியர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
