மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அமைச்சர் ரகுபதிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு: ஜன., 7ல் ‘தினமலர்’ நாளிதழில் அமைச்சர் ரகுபதியின் கருத்து வெளியாகியுள்ளது. அதில், ‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி துாணில் தீபம் ஏற்றுவதை தடுக்கவே தடை உத்தரவு போடப்பட்டது. ‘அப்படி செய்திருக்காவிட்டால், அங்கு தீபம் ஏற்றியிருப்பர். அப்படி நடந்திருந்தால், தீபம் ஏற்றுவது வழக்கமாகி விடும். ஒரு இடத்தில் இது தான் நடக்க வேண்டும் என்றால், அந்த இடத்தில் அது தான் நடக்க வேண்டும்.
‘கிராமத்தில் சுடுகாடு இருக்கும் இடத்தில் தான் பிணத்தை எரிப்பர். வேறு எந்த இடத்திலும் பிணத்தை எரிக்க மாட்டார்கள். அதுபோல், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும். புதிய இடத்தில் தீபம் ஏற்றுவதை அனுமதிக்க முடியாது’ என, உள்ளது.
ஏற்க முடியாது
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ‘நாளிதழ் செய்திகளை கவனத்தில் கொள்ளக்கூடாது’ என்றார். இது வரவேற்கத்தக்க கருத்து. ஆனால், அமைச்சர் அத்தகைய கருத்து வெளியிட்டாரா, இல்லையா என்பதில், அவரது பதிலைக்கோர, அவருக்கு நோட்டீஸ் அனுப்பினால் மட்டுமே சரிபார்க்க முடியும்.
இந்நீதிமன்ற வளாகத்திற்கு ரகுபதியை வரவழைக்க, ரவீந்திரன் விரும்புகிறாரா என, எனக்கு தெரியவில்லை. ‘தினமலர்’ அதிகளவில் விற்பனையாகும் பிரபல நாளிதழ். அமைச்சர் பேட்டி அளித்ததாக செய்தியில் உள்ளது. அமைச்சரிடமிருந்து அறி வுறுத்தல்கள் உள்ளதா என, ரவீந்திரனிடம் கேட்டபோது, அவர் எதிர்மறையாக பதிலளித்தார்.
எனக்கு முன் இரு வழிகள் உள்ளன. அமைச்சரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி அனுமதித்தபோது, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அல்லது உச்ச நீதிமன்றம் மட்டுமே வேறுவிதமாக கூற முடியும். நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின், தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என, மாநில அமைச்சரும், வேறு எந்த அதிகார அமைப்பும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு விவகாரம், நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் வந்துவிட்டால், வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து அதை பின்பற்ற வேண்டும். தீர்ப்பு வெளியான பின், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உள்ள ஒரே வழி, மேல் முறையீடு அல்லது மறு ஆய்வுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது தான். பொது வெளியில் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான கருத்துக்களை, ஒருவர் கூறுவதை ஏற்க முடியாது. தீர்ப்பு பற்றி ஒருவர் கருத்து தெரிவிக்கலாம் அல்லது விமர்சிக்கலாம்.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின், தாமே அதை கட்டுப்படுத்தும் அதிகாரியாக நடந்து கொள்ள முடியாது. சட்ட அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு, அடிப்படை அறிவு இல்லாதிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ரகுபதி கருத்து வெளியிட்டது மிக வெளிப்படையானது. ஏனெனில், இதுவரை அவரிடமிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. உண்மையில், மயானங்கள் குறித்த அவரது கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தியது. எனவே, இவ்விஷயத்தில் அவரது அறியாமையை ஒப்புக்கொள்ள முடியாது.
மையப்பொருள்
இவ்விவகாரத்தில் அவர் மவுனமாக இருப்பதன் மூலம், மலை உச்சியில் தீபம் ஏற்ற அரசு அனுமதிக்காது என, உறுதியாக முடிவு செய்யலாம். ‘ஜன., 6ல் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்யும்’ என, ரகுபதி கூறினார். அத்தகைய மேல் முறையீடு தாக்கல் செய்யப்படவில்லை. மக்களுக்காக அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டாரா என ஆச்சரியப்படுகிறேன்.
ரகுபதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்புவதை தவிர்க்கிறேன். காரணம், அவரது நிலைப்பாட்டை மறுத்து விளக்கமளித்திருப்பவர் வேறு யாரும் அல்ல. தடை உத்தரவை வெளியிட்ட மதுரை கலெக்டர். நீதிமன்ற உத்தரவை செயலிழக்க செய்யும் நோக்கில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ரகுபதி கூறினாலும், தமக்கு அத்தகைய நோக்கம் எதுவும் இல்லை என, கலெக்டர் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரமும் இதையே உறுதிப்படுத்துகிறது.
நிகழ்வுகளின் திருப்பத்திற்காக குறும்புத்தனமாக அரசியல் விளக்கத்தை ரகுபதி அளித்துள்ளார். கலெக்டரின் தடை உத்தரவு நீதிமன்ற அவமதிப்பாகுமா, இல்லையா என்பது இந்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் மையப் பொருளாகும். இங்கு நீதின்றத்தின் விதிமுறை நடைமுறைக்கு வரும். இக்கொள்கைகளை அமைச்சர் மனதில் கொள்ளட்டும்.
அமைச்சரின் கருத்தை நிராகரிப்பதாக கலெக்டர் எடுத்த நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, பரமசிவம் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணையை முடித்து வைப்பது பொருத்தமானது என கருதுகிறேன். தேவைப்பட்டால், இம்மனுவை மீண்டும் எடுத்து விசாரிக்க தயங்க மாட்டேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன். இவ்வாறு உத்தரவிட்டார்.
