லண்டன் : உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் உள்ள தமிழகத்திற்கு

லண்டன் : உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் உள்ள தமிழகத்திற்கு சொந்தமான 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலையை பிரிட்டன் அரசு நம் நாட்டுக்கு திருப்பியளித்தது.

பல நுாற்றாண்டுகளுக்கு முன்னதாகவே சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய நம் தமிழகத்தில் இருந்து ஏராளமான சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. அந்த சிலைகளை கண்டுபிடித்து மீட்டுக்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தடிகொம்பு ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து மாயமான சிலை ஒன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.இந்தச் சிலை, 1967ம் ஆண்டு சோத்பீஸ் ஏலத்தில் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டது. ஆனால், 2019ல் ஒரு ஆய்வாளர் மூலம், 1957ல் கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் வெளியானதை அடுத்து இது திருடப்பட்டது என தெரியவந்தது. இச்சிலை, கோவிலில் இருந்து திருடப்பட்டு, நவீன நகல் ஒன்றால் மாற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிர விசாரணையில், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டது உறுதியானதை அடுத்து, இந்தியத் துாதரகம் நடத்திய பேச்சில், சிலையை ஒப்படைப்பதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கலாசார அமைச்சகத்தின் ஒப்புதலுடன் பரிமாற்ற ஆவணம் தயாரிக்கப்பட்டு, லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் வைத்து திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை ஒப்படைக்கப்பட்டது. அந்தச் சிலை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளது.

பின்னர் தமிழக கோவிலில் பாரம்பரிய சடங்கிற்கு பிறகு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படும். இந்தச் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியின்போது, இந்திய அரசு உதவியுடன் மீட்கப்பட்ட, குடையுடன் அமர்ந்த விநாயகர், நடனமாடும் விநாயகர், நடனமாடும் குழந்தை பாலகிருஷ்ணர் என மேலும் நான்கு பழங்கால சிலைகளும் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு இந்தியா – பிரிட்டன் இடையேயான வலுவான ஒத்துழைப்பையும், சிலை கடத்தலுக்கு எதிரான முயற்சியையும் காட்டுவதாகவும் உள்ளதாக துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link