ஆயுதங்கள் கையிருப்பு குறைகிறது அமெரிக்க ராணுவ தலைமையகம் அலறல்

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நேற்று ஐந்தாவது நாளை கடந்துள்ள நிலையில், போர் மேலும் நீடித்தால், அமெரிக்காவின் முக்கிய ஏவுகணை கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்படலாம் என, ‘பென்டகன்’ எனப்படும் அமெரிக்க ராணுவ தலைமையக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஈரான் அணுசக்தி பேச்சில் ஒத்துழைக்க மறுத்ததாக கூறி, அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை துவங்கின.

எச்சரிக்கை இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அந்நாட்டின் முக்கிய படை பிரிவு தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்கும் என கூறியிருந்தார். போரை நீண்ட காலம் நடத்தக்கூடிய அளவுக்கு ஆயுத கையிருப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த போர் 10 நாட்கள் நீடித்தாலே அமெரிக்காவின் முக்கிய ஏவுகணை கையிருப்பு குறையக் கூடும் என, பென்டகன் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவால் இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:

ஈரான் மீதான போர், மேலும் 10 நாட்கள் நீடித்தால் அமெரிக்காவின் முக்கிய ஏவுகணை கையிருப்பு குறையக்கூடும்.

குறிப்பாக, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணைகள் குறையும். இதனால் ஈரான் மேற்கொள்ளும் பதிலடி தாக்குதல்களை தடுக்க சிரமம் ஏற்படலாம்.

இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போன்ற நட்பு நாடுகளுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவியால் அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு ஏற்கனவே குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஈரானுடன் ஏற்பட்ட மோதலில், ‘தாட்’ எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பில் இருந்த ஏவுகணைகளில் 25 சதவீதத்தை பயன்படுத்தியுள்ளோம். அமெரிக்க கடற்படை பயன்படுத்தும் எஸ்.எம்., 3 ஏவுகணை தடுப்பு ஆயுதமும் குறைந்து வருகிறது.

ஈரான், மாதத்திற்கு 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தயாரிக்கிறது. ஆனால், அமெரிக்காவில் மாதத்திற்கு ஆறு அல்லது ஏழு தடுப்பு ஏவுகணைகள் மட்டுமே தயாரிக்க முடிகிறது. இந்த உற்பத்தி வேக வேறுபாடு, நீண்டகால போரில் அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெள்ளை மாளிகையில்

ஆயுத நிறுவனங்கள்

ஈரான் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் துல்லியமாக தாக்க கூடிய முக்கிய ஆயுதங்களின் கையிருப்புகள் குறைந்து வருகிறது என்ற கவலை எழுந்துள்ளது. இதை சமாளிக்க, வெள்ளை மாளிகையில் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுடன் அவசர ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரிய ஆயுத தயாரிப்பு நிறுவனங்களான, ‘லாக்ஹீட் மார்டீன், ஆர்.டி.எக்ஸ்., போயிங்’ ஆகியவை பங்கேற்க உள்ளன.

போர் நீண்டால் அமெரிக்காவுக்கு மொத்த செலவு 18.8 லட்சம் கோடி வரை அதிகரிக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது உலக நாடுகளிடம் அமெரிக்கா வசூலித்த இறக்குமதி வரியை விட அதிகம்.

Source link