திருப்பூர்: தினசரி பஞ்சு வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக, இறக்குமதி வரியில் விலக்கு அளிக்க வேண்டுமென, ஜவுளித் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
நடப்பு பருத்தி ஆண்டில் (2025 அக்., – 2026 செப்.,) வழக்கமான பஞ்சு மகசூல் குறையும் என்றும், இந்திய பருத்தி கழகம் பஞ்சு இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், மத்திய ஜவுளித் துறை கமிஷனரகம் அறிவுறுத்தியது. அதன்படி, சீசன் துவங்கியதில் இருந்தே, இந்திய பருத்தி கழகம், பஞ்சு கொள்முதலை துவக்கியது.
உள்நாட்டு நுாற்பாலைகளுக்கான விற்பனையையும் துவக்கி விட்டது. கடந்த ஐந்து மாதங்களில், 168 லட்சம் பேல்கள் (ஒரு பேல் – 170 கிலோ) அளவுக்கு பஞ்சு விற்பனை நடந்துள்ளது.
தெலுங்கானா பஞ்சு வரத்து குறைந்து, மஹாராஷ்டிரா பஞ்சு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும், 9.37 லட்சம் பேல்கள் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ”விலை உயர வாய்ப்பு இருக்கலாம் என கருதி, விவசாயிகளும் பஞ்சை விற்பனைக்கு எடுத்து வருவது குறைந்துள்ளது.
தினசரி பஞ்சு வரத்து, இரண்டு லட்சம் பேல்களாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக, ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்து விட்டது. நடப்பு சீசனில் பஞ்சு வரத்து சரிவால், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக, பஞ்சு இறக்குமதி வரி 11 சதவீதத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்,” என்றார்.
பஞ்சு வரத்து விபரம்:
ஆண்டு பேல்
2025
அக்., 13,85,500
நவ., 30,26,700
டிச., 56,12,000
2026
ஜன., 43,50,100
பிப்., 24,18,600
மொத்த வரத்து: 1,67,92,900
மாநிலங்களில் பஞ்சு வரத்து
மாநிலம் பேல்
குஜராத் 4,67,000
தெலுங்கானா 3,56,000
கர்நாடகா 1,92,000
ஆந்திரா 1,59,000
ம.பி., 1,50,000
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், தமிழகம் 60,000
